இந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு! ஐஆர்சிடிசி அதிரடி

உலகிலேயே குறைந்த விலையில் இந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு! ஐஆர்சிடிசி அதிரடி


ரயில் பயணிகளுக்கும் காப்பீடு அளிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஸ்ரீ ராம் ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஐசிஐசிஐ லம்பார்ட் மற்றும் ராயல் சுந்தரம் போன்ற நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சராசரியாக ஒவ்வொரு நாளும் ரயிலில் பயணம் செய்யும் 1.3 கோடி பேரில் 1.2 கோடி பேர் முன்பதிவில்லாமல் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் முன்பதிவு செய்து பயணிக்கும் 10 லட்சம் பயணிகளுக்கு, காப்பீடு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே திட்டமிட்டது.

ரயில்வேயின் துணை அமைப்பான ஐஆர்சிடிசி நிறுவனத்தின் இணையதளம் மூலம் 'ஆன்லைன்' முன்பதிவு செய்யப்படுகிறது. அதனால், இந்த காப்பீட்டு திட்டத்தையும் ஐஆர்சிடிசி மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான  ஸ்ரீ ராம் ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஐசிஐசிஐ லம்பார்ட் மற்றும் ராயல் சுந்தரம் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் தொடங்கும் இந்த திட்டத்தில்  ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகள்  கூடுதலாக 92 பைசா மட்டுமே செலுத்தி காப்பீடு வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த காப்பீட்டு திட்டத்தின்படி, பயணிகளுக்கு உயிரிழப்பு மற்றும் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; பகுதி ஊனம் ஏற்படுவோருக்கு 7.5 லட்சம் ரூபாயும்; காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்க்கப்படுவோருக்கு, இரண்டு லட்சம் ரூபாயும்; உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.