மக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர், ஆச்சி மசலா

மக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர், ஆச்சி மசலா


''புதிய முயற்சிகளைத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு திருப்புமுனைதான்.

கோத்ரெஜ் கம்பெனியில் ஏரியா மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சொந்த நிறுவனம் தொடங்கியிருக்கவில்லை என்றால், இப்போதும் ஏதாவது ஒரு நிறுவன பொருளின் விற்பனை இலக்குகளுக்காகத்தான் ஓடிக்கொண்டிருந்திருப்பேன். முதலில் சிறிய அளவில்தான் இந்த தொழிலை தொடங்கினேன். ஆரம்பத்தில் கடை கடையாக ஏறி இறங்கினாலும் ஒரு வியாபாரியும் ஆதரிக்கவில்லை.

நமது தயாரிப்பின் தேவையை மக்கள் உணரும்போதுதான் வெற்றிபெற முடியும் என்பதை உணர்ந்து, நேரடியாக மக்களிடமே செல்ல ஆரம்பித்தேன். வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடக்கும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று எனது மசாலா பொருட்களை விற்பனை செய்வேன். கிராமங்களின் சந்தை வாய்ப்பை அறிந்து, எங்களது தயாரிப்புகள் இரண்டு ரூபாய்க்குகூட கிடைக்கும் என்கிற செய்தியை மக்களிடம் எடுத்துச் சொன்னேன்.

எனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இதுதான் அடிப்படையாக இருந்தது. வியாபாரிகள் பலரும் 'எங்களுக்கு சப்ளை செய்யுங்கள்’ என்று கேட்டு வர ஆரம்பித்தனர். அதற்கு பிறகுதான் தொழிலை முறையான நிறுவனமாக மாற்றினேன்.
எனது ஒவ்வொரு தயாரிப்புகளுக்குப் பின்னும் ஒரு அனுபவம் இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்களின் வேலைப்பளுவைக் குறைக்க இட்லி பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, பல்வேறு வகையான தொக்கு வகைகள் என அறிமுகப்படுத்தினோம்.