வருமானம் தரும் தேவையில்லா பொருட்கள்

வருமானம் தரும் தேவையில்லா பொருட்கள்

வீடுகளில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் அவைகளின் பயன்பாடு முடிந்தவுடன் அவை குப்பைத்தொட்டிக்குத்தான் போகின்றன. அத்தகைய பயன்பாடில்லாத பொருட்களுக்கு மீண்டும் உயிர் தருகிறார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கிழிந்த துணிகள்,  பயணச் சீட்டுகள்,  நூல் கண்டு அட்டைகள், பென்சில், ரப்பர் போன்றவற்றை கொண்டு உருவாக்கப்படும் பொருட்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன என்பதுதான் இங்கே விஷயமே.


கலை ஆர்வம் அதிகமானது!

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகே உள்ள அமரபூண்டியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்த போது, ''என் பெற்றோர்களுக்கு என்னையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றுதான் எங்களை படிக்க வைத்தார்கள்.  நான் பள்ளி மேல் படிப்புக்காக தொழில்பயிற்சி பாடப் பிரிவை தேர்வு செய்தேன். என்னுடன் பள்ளியில் முதல் பாடப் பிரிவில் படிக்கும் நண்பர்களுக்கு பாட திட்டத்தில் வரைபடம் வரையும் செயல்பாடு அதிகமாக இருக்கும். அவர்களுக்கு நானே விரும்பி படங்களை வரைந்து கொடுப்பேன். இப்படிதான் என்னுடைய கலை ஆர்வமானது.


மாத்தி யோசித்தேன்!

என்னுடைய பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கோயம்புத்தூரில் இருக்கும் ஜீவன் என்பவரிடம் பெயிண்டிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவரிடமே ஐந்து ஆண்டுகள் கலை குறித்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டேன். பிறகு கலைத்தொழில் ஆசிரியர் பயிற்சியையும் முடித்து சான்றிதழையும் பெற்றுவிட்டேன். இதன் பிறகே நாமும் சம்பாதித்து சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் எனக்குள் உதயமானது.  ஆரம்பத்தில் எல்லோரையும் போல நானும் பிறந்த நாள் பரிசு,  நினைவுச் சின்னம் வரைதல் என்று  சம்பாதித்தேன். நாம் இப்போது செய்யும் தொழிலையே ஏன் மாத்தி யோசித்து முயற்சி செய்யக் கூடாது என்று யோசித்தேன்.

அப்போதுதான் வீட்டு உபயோக பொருட்களில் வீணாகாக கிடப்பதை வைத்து ஏன நாம் வித்தியாசமான பொருட்களை உருவாக்கக் கூடாது என்கிற சிந்தனை எனக்குள் எழுந்தது.  அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் வீட்டு உபயோக பொருட்களில்  பயன்படுத்தாத பொருட்கள் போன்றவற்றை முதலில் சேகரித்தேன். அதை வைத்து எனக்கு தெரிந்த டிசைன்களை உருவாக்கினேன்.  என்னுடைய கலை ஆர்வத்தால் நான் தயாரிக்கும் பொருட்கள அனைத்தும் அழகாக உருவெடுத்தது. அந்த அழகுதான் எனக்கு நல்ல வருமானத்தையும் பெற்றுத் தந்தது.  வீடு வீடாக போய், பழைய பொருட்கள் வாங்குவது தெரிந்து ஏரளமானவர்கள் எங்களிடம் அவர்களே வந்து பழைய பொருட்களை கொடுத்துவிட்டு செல்கிறார்கள்.

நல்ல வருமானம்!

சாதரணமான ஒரு கலை பொருளை தாயாரிக்க 50-75 ரூபாய் வரை செலவானாலும் 200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதே மாதிரி போட்டோ பெயிண்டிங், சார்ட் கலரிங்ன்னு ஒவ்வொரு கலை பொருளுக்கு அதுக்கு தகுந்த மாதிரி விலை வைத்து விற்பனை செய்யலாம். என்னுடைய இந்த கலை உழைப்பால் சம்பாதித்து நல்ல நிலைமையில் இருக்கிறேன்.


வித்தியாசமான கலை பொருட்கள்!

கூழாங்கற்கள்,  பேருந்து டிக்கெட்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி மயில் உருவங்கள், பெரியார், பாரதியார் போன்ற உருவ படங்களை தயாரித்து விற்பனை செய்தேன்.  இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலர் காதலியின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொட்டுக்களை கொடுத்து அவர்களின் உருவப் படங்களை வரைந்து தரச் சொல்வார்கள். இப்படியாக மாதம் எனக்கு 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் கிடைத்து விடும்.  இதுபோக மூன்று பள்ளிகளுக்கு வரைபட ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.  இதனாலும் எனக்கு மாதம் 4,000 ரூபாய் கிடைக்கும்.  நான் தயாரிக்கும் பொருட்கள் எல்லாமே ஒரே மாதிரி விற்பனை ஆவதில்லை என்றாலும் சீசன் நேரங்களில் நல்ல வருமானத்தை பார்க்கலாம்.  சென்ற வருடம் நான் வரைந்த எம்மதமும் சம்மதம் என்கிற வரைபடம் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றிருக்கிறது.

என்னுடைய கலையை இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக சொல்லிக் கொடுத்து வருகிறேன். முன்பு அவர்கள் தேவையில்லை என்று தூக்கி எறிந்த பொருட்களை வைத்து இன்று கலை பொருட்களை அவர்களாகவே தயாரிப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்றார் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டோம் என்கிற திருப்தியோடு!